ஜுனாகத்: குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டம் மஜ்வாடி கேட் பகுதி அருகே ஒரு மசூதி உள்ளது. இந்த மசூதி ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், மசூதி கட்டப்பட்டுள்ள நிலத்தின் உரிமை தொடர்பான ஆவணங்களை 5 நாட்களுக்குள் நகராட்சியின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு அமைப்பில் சமர்ப்பிக்கும்படி மாநகராட்சி நிர்வகம் ஜூன் 14ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு மஜ்வாடி கேட் பகுதி அருகே திரண்ட இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டம் நடத்த முயன்றவர்களுடன் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த சிலர் கோஷமிட்டவாறு, கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர். கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். அங்கிருந்த ஒரு வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 174 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.