குவாலியர்: ஒன்றிய அமைச்சரின் மகனின் நிறுவனத்தில் பணமோசடி செய்த கொள்முதல் மேலாளர் மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகனான மஹாநாரியாமன், ‘மைமண்டி’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனமானது ஆன்லைன் ஆப்ஸ் மூலம் மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை கொள்முதல் மற்றும் விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அந்நிறுவனத்தில் பணியாற்றும் மேலாளர் உட்கர்ஷ் ஹண்டே என்பவர், அதே நிறுவனத்தில் பணியாற்றும் கொள்முதல் மேலாளர் சிவம் குப்தா மீது, ஜனகஞ்ச் போலீசில் பண மோசடி புகார் கொடுத்துள்ளார். அதையடுத்து சிவம் குப்தா மீது போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி வீபேந்திர சவுகான் கூறுகையில், ‘மைமண்டி செயலி மூலம் காய்கறிகள், பழங்கள் கொள்முதல் செய்ததில் சிவம் குப்தா பணமோசடி செய்துள்ளார்.
எவ்வளது தொகை மோசடி நடந்துள்ளது என்பது குறித்து, அந்த நிறுவனத்திடம் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளது. ‘மைமண்டி’ நிறுவனத்தில் ஒன்றிய அமைச்சரின் மகன் மஹாநாரியாமன் மற்றும் ரத்தன் டாடா நிறுவனம் முதலீடு செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.