Tuesday, May 21, 2024
Home » பசுமை, டிஜிட்டல் பொருளாதார துறைகளில் இணைந்து செயல்படுவது எப்படி?.. சிங்கப்பூர் அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதம்

பசுமை, டிஜிட்டல் பொருளாதார துறைகளில் இணைந்து செயல்படுவது எப்படி?.. சிங்கப்பூர் அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதம்

by MuthuKumar

சென்னை: சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தக துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது பசுமை, டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் விவாதித்தனர்.முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிங்கப்பூர் நாட்டிற்கு நேற்று சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் டெமாசெக், செம்ப்கார்ப், கேப்பிட்டலேண்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தக துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது அமைச்சர் ஈஸ்வரன், வழக்கமான முதலீடுகள் தவிர பசுமை பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது குறித்தும், செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் முதல்வரிடம் விவாதித்ததோடு, அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடக்க இருக்கும் Fintech மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசின் குழுவை அனுப்பிடவும் கேட்டுக் கொண்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூரை சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் பசுமை சக்தியை உருவாக்குவது குறித்தும் பேசி வருவதாக அமைச்சர் ஈஸ்வரனிடம் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக, அமைச்சர் ஈஸ்வரன் தனது பாராட்டுகளை முதல்வருக்கு தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின்போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

two × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi