திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட கனிமவள உதவி இயக்குநரை மாவட்ட கலெக்டர் வினீத், பணி விடுப்பு செய்து உத்தரவிட்டுள்ளார். இதனை வரவேற்கும் விதமாக விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். திருப்பூர் மாவட்ட கனிமவள உதவி இயக்குநராக இருந்தவர் வள்ளல். இவர் கடந்த ஆண்டு ஜூலை முதல் பணியாற்றி வந்தார். கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு கூட்டம், திஷா கூட்டம் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முக்கிய ஆய்வு கூட்டம், அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்தார். மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காமல், அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் அவர் விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து கனிம வள உதவி இயக்குநர் வள்ளலை அந்த பணியில் இருந்து விடுவிப்பதாக கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு பதிலாக உதவி புவியியலாளர் சச்சின் ஆனந்த், கனிம வள உதவி இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்று, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் தமிழக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என பலரும் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.