ஆவடி: ரூ.8.2 கோடி மதிப்பீட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியை சா.மு. நாசர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். ஆவடி 33வது வார்டு தேனாம்பேடு பகுதியில் அமைந்திருக்கக்கூடிய அரசுப்பள்ளி தற்போது 10ம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு ரூ.8.2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சியில் திமுக திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு. நாசர் எம்எல்ஏ கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த பள்ளிக் கட்டிடம் பிரைமரி பள்ளி மாணவர்களுக்கு 10 அறைகள், உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 10 அறைகள் என கட்டப்பட உள்ளது. மேலும் கணினி அறைகள், ஆய்வாக அறைகள், ஸ்மார்ட் வகுப்பறை, நூலகம், முதலுதவி மையம் போன்ற பல்வேறு நவீன வசதிகளுடனும் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டமானது சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் அரசுப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு சிறந்த கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து ஆவடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் மேனாம்பேடு பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அமுதம் நியாய விலைக் கடையை சா.மு.நாசர் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி, கல்வெட்டை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நுகர்வோருக்கு சர்க்கரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மேயர் உதயகுமார், பகுதி மண்டலக்குழு தலைவர் அமுதா பேபி சேகர், கழகப் பொருளாளர் சன் பிரகாஷ், பகுதிச் செயலாளர் ராஜேந்திரன், 33வது வார்டு உறுப்பினர் ஹரி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.