சங்கராபுரம்: அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் ரூ.66 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சௌந்தரவல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ஜோதி, அரசு பஸ் கண்டக்டர். இவர் கடந்த 12ம் தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு தனது மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேதி குறிப்பதற்காக புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்றார். நேற்று மாலை வீடு திரும்பியபோது ஜன்னல் கதவுகள் உடைக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 86 பவுன் நகைகள், ரூ.23 லட்சம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதன் மொத்த மதிப்பு ரூ. 66 லட்சமாகும். இது குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.அரசு பேருந்து நடத்துநர் வீட்டில் 86 பவுன் நகைகள், 23 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.