மதுரை: குண்டர் சட்ட நடவடிக்கை தொடர்பான சட்டதிருத்தம் குறித்து, அரசின் பரிசீலனையில் உள்ளதாக ஐகோர்ட் கிளையில் கூறப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பொன்னுமான் துறையைச் ேசர்ந்த நாகராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் தமிழழகன் (28) மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள திண்டுக்கல் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். உரிய காலத்தில் ஆவணங்கள் வழங்கவில்லை. எனவே, என் மகன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், குண்டர் சட்ட நடவடிக்கைகளுக்கு உத்தரவிடும் அதிகாரத்தை காவல் துறை ஐஜி அல்லது போலீஸ் கமிஷனர்களுக்கு வழங்கிடும் வகையில், சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசு தரப்பில் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குண்டர் தடுப்பு சட்டப்பிரிவில் திருத்தம் செய்வது தொடர்பான நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. இதன் மீது இறுதி முடிவெடுக்க 4 வார கால அவகாசம் வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் கேட்டபடி 4 வார கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் தேவையான திருத்தங்கள் மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆக.1க்கு தள்ளி வைத்தனர்.