சென்னை : பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக 58,415 பணியிடங்கள் உள்ளன. மின்வாரியத்தின் அடிப்படைப்பணிகளான மின்கம்பங்களை அமைத்தல், மின் கம்பிகளை பூமிக்கு அடியில் புதைத்தல், மின்பயன்பாட்டைக் கணக்கிடுதல் பணிகளுக்கான 10,000 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை அடிப்படையில் நியமிக்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது மிகவும் பொறுப்பு வாய்ந்த, ஆபத்தான பணி. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, அனுபவமும், திறமையும் இல்லாதவர்களை குத்தகை முறையில் நியமித்தால் குளறுபடிகளும், விபத்துகளும் நடக்கவே வழிவகுக்கும். எனவே, இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும். நிரந்தர அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க அரசு முன்வர வேண்டும்.