Wednesday, May 15, 2024
Home » ராஜ்பவனை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை: அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு

ராஜ்பவனை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துகள் நிராகரிக்கப்பட வேண்டியவை: அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு

by Arun Kumar

சென்னை: வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வடலூரில் உள்ள மேட்டுக்குப்பத்தில் இருக்கும் வள்ளலார் சித்தி அடைந்ததை இடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசிய கருத்துகள் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. வள்ளலார் 10 ஆயிர வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்துள்ளேன். அதேபோல் வள்ளலாரின் நூல்களை படித்த போதும் பிரமித்து போனேன். இங்குள்ள மக்களின் உடையும், தோற்றமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் உண்மை என்பது ஒரே கடவுள், அவன் படைத்த மனிதன், செடி, கொடிகள் எல்லாம் ஒரே குடும்பம். அந்த வகையில் என்னில் உன்னையும், உன்னில் என்னையும் காண்பது சனாதான தர்மம் தான்.

வள்ளலாரின் வரிகளான ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்பது சனாதன தர்மத்தின் எதிரொலி. ஆனால் அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதனை சிலர் தவறாக நினைக்கின்றனர். காரிருளை நீக்க 200 ஆண்டுகளுக்கு முன் வந்த ஜோதி தான் வள்ளலார். நமது பாரதம் சனாதன தர்மத்தால் ஆனது. ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்தபோதும் வெளிநாட்டில் இருந்து வந்த புதிய வழிபாட்டு நடைமுறைகளால் நமது அடையாளம் மறைந்து போனது என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

வள்ளலார் வழிகாட்டிய நெறிமுறைகளை சிதைத்து சனாதன போர்வைக்குள் சன்மார்க்க நெறியினை புகுத்த ஆளுநர் முயற்சி செய்து வருகிறார். தமிழ் பண்பாடும், விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினை கொண்டவை. ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை. வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 10,000 ஆண்டுகால சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் அவா்கள் ஈடுபட்டிருக்கிறார்,

தமிழ்ப் பண்பாடும் – விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

4 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi