சென்னை : அதிமுக ஆட்சியின் போது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் உள்ளிட்ட 13 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா 2020 மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா 2020 ஆகியவற்றிற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பித்திற்கு பதில் அளிக்கப்பட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதிமுக ஆட்சியில் பன்வாரிலால் புரோகித் ஆளுநராக இருந்த போது, இந்த 2 மசோதாக்களும் முறையே 2020 ஜனவரி 13 மற்றும் 18ம் தேதிகளில் ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டன.
கடந்த அதிமுக அரசு நிறைவேற்றிய இந்த 2 தீர்மானங்கள் உட்பட சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறையின் அதிகாரி தெரிவித்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலின் படி,ஆளுநர் ரவி கடந்த ஆண்டு 48 மசோதாக்களுக்கும் இந்த ஆண்டு இதுவரை தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2023 உட்பட 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.