கும்பகோணம்: சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட மறுத்து சுதந்திரத்துக்காக பாடுபட்ட தலைவரை ஆளுநர் அவமதித்துள்ளதாக ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்துள்ளார். மமக மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: சுதந்திர போராட்ட தியாகியும், சுதந்திரத்துக்காக 8 ஆண்டுகளை சிறையில் கழித்து, ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்து நூறு வயதை கடந்தவர் தோழர் சங்கரய்யா.
தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர், மாணவ தலைவர், சிறந்த பொதுவுடமை சிந்தனையாளர், சங்கரய்யாவின் ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கான கோப்பில் ைகயொப்பம் இட கவர்னர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார். சுதந்திரத்துக்காக பாடுபட்ட உன்னத தலைவரை ஆளுநர் அவமதித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது. ஆளுநர் தமது சித்தாந்த சிந்தனையை கடந்து மக்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.