சென்னை: மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: மதிமுகவின் 29வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை அகற்றக் கோரும் கையெழுத்து இயக்கம் வரும் 20ம் தேதி காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது. சென்னையில் வைகோ இவ்வியக்கத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் கோவையிலும், பொருளாளர் செந்திலதிபன் கடலூரிலும், முதன்மைச் செயலாளர் துரை வைகோ தென்சென்னையிலும், துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா காஞ்சிபுரத்திலும், துணைப் பொதுச்செயலாளர் மணி விழுப்புரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ராசேந்திரன் திருநெல்வேலியிலும், துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் குடந்தையிலும், துணைப் பொதுச்செயலாளர் ரொஹையா சேக்முகமது திருச்சியிலும் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள். கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, மக்கள் இயக்கமாக நடத்துகிறார்கள்.