சென்னை: அரசு பேருந்துகளில் வெள்ள நிவாரணப் பொருட்களை பொதுமக்கள் கட்டணமின்றி அனுப்பலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. கனமழையால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள் 10 அடிக்கு மேல் மழை வெள்ளம் புகுந்ததில், பொருள்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. இரு சக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவையும் வெள்ளத்தில் மூழ்கின. மாநகரின் நாலாபுறமும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. இதனால் தூத்துக்குடி மாநகரமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
மழை ஓய்ந்துவிட்டபோதிலும், மாநகராட்சியின் அனைத்து இடங்களிலும் இன்னும் வெள்ளநீர் வடிந்தபாடில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் தமிழக பேரிடர் மீட்புக்குழுவினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே, தென் மாவட்டங்களில் அதி கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் 7397766651 வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு பேருந்துகளில் வெள்ள நிவாரணப் பொருட்களை பொதுமக்கள் கட்டணமின்றி அனுப்பலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு பேருந்து மூலம் அனுப்பலாம் என அரசு அறிவித்துள்ளது. நிவாரணப் பொருட்களை கட்டணமின்றி அனுப்ப அனுமதிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.