புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் அளித்த அன்புக்கு நன்றி என்று பிரதமர் மோடி மக்களுக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பாஜக கூட்டணி ஆட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.
அதாவது இன்று மக்களவை தேர்தல் அட்டவணை வெளியாவதால், இனி புதிய அரசு தேர்வான பின்னர் தான் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ஜம்மு – காஷ்மீரின் 370வது பிரிவை ரத்து செய்தல், பெண்களுக்கு இடஒதுக்கீடு, முத்தலாக், ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளால் நாடு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மக்களின் நம்பிக்கையைப் பெற முடிந்தது. 140 கோடி மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்றேன். விவசாயிகள், ஏழைகள், பெண்கள் என அனைத்துப் பிரிவினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடிந்தது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால், பல திட்டங்கள் சாத்தியமானது. ஒன்றிய பாஜக அரசுக்கு மக்கள் அளித்த அன்புக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.