சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. இந்த விலையேற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்தது. இதன் ஒரு பகுதியாக ஏப்ரல் மாதம் 19ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.55,120க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற நிலையை கண்டது. இந்நிலையில் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து கடந்த மே 20ம் தேதி சவரன் ரூ.55,200க்கு விற்கப்பட்டது. இந்த விலை தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற உயரத்தை தொட்டது. அதன் பிறகு தங்கம் விலையில் தொடர்ந்து ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ஒரு சவரன் ரூ.53,328க்கு விற்பனையானது. தொடர்ந்து 4ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.632 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,960க்கு விற்கப்பட்டது. 5ம் தேதி (நேற்று முன்தினம்) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,725க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,800க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,800க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,400க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.