சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.88 உயர்ந்தது. தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் இருந்து வருகிறது. சில நேரத்தில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொடர்ச்சியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 20ம் தேதி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் சவரன் ரூ.44,400க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த 21ம் தேதி தங்கம் விலை திடீரென குறைந்தது. அன்றைய தினம் சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.44,240க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினமும் தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,510க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.44,080க்கும் விற்கப்பட்டது.
தொடர்ந்து 2 நாட்களில் தங்கம் விலை சவரன் ரூ.320 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,521க்கும், சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,168க்கும் விற்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.