சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களில் சவரன் ரூ.560 உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலை ஏற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்து வருகிறது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 21ம் தேதி ஒரு சவரன் ரூ.46,600க்கு விற்கப்பட்டது. 22ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 22ம் தேதி சவரன் ரூ.46,880 ஆகவும், 23ம் தேதி சவரன் ரூ.47,000 என்றும் விற்பனையானது. 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட் விடுமுறை ஆகும். அதனால், அன்றைய தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிகரித்து காணப்பட்டது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,880க்கும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.47,040க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,895க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,160க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 4 நாளில் சவரன் ரூ.560 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.