சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கல்லலில் பேக்கரி நடத்தி வந்தவர் நாச்சியப்பன் (55). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை வைத்து நாச்சியப்பன்னிடம் இருந்து சிலர் ரூ.50 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் கடந்த 25.01.2022 அன்று புதுக்கோட்டை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் சிறுமியின் தாயார், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல், ‘தனது கணவர் நாச்சியப்பன் மீது பாலியல் குற்றம் சுமத்தி, அவரிடமிருந்து ரூ.50 லட்சம் வரை பறித்துக் கொண்டு, அவரை மிரட்டியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்’ என்று தற்கொலை செய்து கொண்ட நாச்சியப்பனின் மனைவி சகுந்தலா வழக்கு தொடர்ந்தார். இந்த 2 மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு, மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி பெலிக்ஸ் சுரேஷ் பீட்டருக்கு, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, நாச்சியப்பனை மிரட்டி பணம் பறித்ததாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கல்லல் ஒன்றிய செயலாளர் குணாளனை, நேற்று கைது செய்தனர்.