திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகரை சேர்ந்தவர் கோகுலகண்ணன் (21). இவர், 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானாள். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் கடந்த ஆண்டு உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோகுலகண்ணனை போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக கோகுலகண்ணனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் அரசு சார்பில் வழங்கவும் பரிந்துரைத்தார். தற்போது சிறுமிக்கு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.