பெரம்பூர்: 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த பெற்றோர்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரிய ஏரி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 11ம் வகுப்பு படித்தார். அதே பள்ளியில் படிக்கும் ஒருவரை சிறுமி காதலித்துவந்துள்ளதாக தெரிகிறது. இதனால் சிறுமியின் தந்தை சென்னை வியாசர்பாடியில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு கடந்த 13ம்தேதி சிறுமியை அழைத்து வந்துள்ளார். பின்னர் தனது அக்கா மகன் அஜித்குமார் (26) என்பவருக்கு கடந்த 15ம் தேதி வியாசர்பாடியில் பி.வி காலனியில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் திருமணத்தில் அஜித்குமாருக்கும் சிறுமிக்கும் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஸ்டெல்லா வந்து விசாரணை நடத்தினார். பின்னர் குழந்தை திருமணம் தடைச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கும்படி எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்திவைத்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரின் பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர்.