சென்னை: பகுத்தறிவுச் சிந்தனையாளர் புலவர் செந்தலை ந. கவுதமனனின் மனைவி உலகநாயகியின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
“பகுத்தறிவுச் சிந்தனையாளர் புலவர் செந்தலை ந. கவுதமனனின் மனைவி உலகநாயகி, உடல்நலம் பாதிக்கப்பட்டு மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.
பகுத்தறிவும், தமிழும் தமது இரு கண்களெனப் போற்றி வாழ்ந்த உலகநாயகி அம்மையாரை இழந்து வாடும் செந்தலை ந. கவுதமன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், பெரியார் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.