கூடுவாஞ்சேரி: ளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்துகிடக்கும் குப்பை கழிவை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு அரசு விரைவு பேருந்துகளும், தமிழக அரசு பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதுபோல் சென்னை புறநகர் பகுதிகளான கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு, பிராட்வே, தி.நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகள் வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பயணிகளின் வசதிக்காக தனியார் ஓட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த ஓட்டலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சாப்பிடுகின்றனர். ஓட்டலில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஒட்டி கொட்டப்படுகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. எனவே, குப்பை கழிவை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள தனியார் ஓட்டல்களில் விற்கப்படும் உணவுகளின் விலையைவிட 2 மடங்கு கூடுதலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள ஓட்டல்களில் விற்கப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. உணவு பொருட்களுக்காக அதிக பணம் வசூல் செய்கின்றனர். மேலும் ஓட்டலில் பயணிகள் சாப்பிட்டு விட்டு போட்டுவிட்டு செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பை, கழிவுகளை எடுத்து சென்று பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டியுள்ள இடத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் குப்பை, கழிவு நாள்தோறும் அதிகரித்து அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் குப்பை கிடங்காக மாறி வருகிறது. எனவே, உயரதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.