திருமலை:வீடு புகுந்து கத்திமுனையில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ரவுடி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள லாலாப்பேட்டை அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இந்த சிறுமி கடந்த வாரம் அங்குள்ள நந்தவனப்பகுதிக்கு தனது சகோதரர்களுடன் சென்றார். அங்கு மங்கல்ஹாட் சீதாராம்பேட்டையை சேர்ந்த ரவுடி அபேத் (35) என்பவர் தனது நண்பர்களுடன் வந்துள்ளார். சிறுமியிடம் அபேத் மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த சிறுமி மற்றும் அவரது சகோதரர்கள் தட்டி கேட்டுள்ளனர். தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறுமியை அழைத்து கொண்டு அவரது சகோதரர்கள் வீடு திரும்பினர். சிறுமியின் வீட்டை ரவுடி அபேத் மற்றும் அவரது நண்பர்கள் அதே சாலையில் நோட்டமிட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென ரவுடி அபேத் மற்றும் அவரது நண்பர்களான டைசன் (28), மகேஷ் (27) ஆகிய 3 பேரும் சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். சிறுமி கூச்சலிட்டார். அங்கு வந்த அவரது சகோதரர்களை அபேத் உள்ளிட்டோர் கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் சிறுமியை கத்திமுனையில் அறைக்குள் தூக்கி சென்று 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் தனது நண்பர்களான தஹ்சீன் (25), சின்னா (23), அஷ்ரப் (20), இம்ரான் (23) ஆகியோரை வரவழைத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய வைத்துள்ளனர். 7 வாலிபர்கள் பலாத்காரம் செய்வதை தடுக்க முடியாமல் சிறுமியின் சகோதரர்கள் கதறினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று தனது சகோதரர்களுடன் சென்று மீர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு சிறுமியின் வீட்டருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் ரவுடி அபேத் உள்ளிட்ட 7 பேரையும் நேற்றிரவு கைது செய்தனர். அனைவரும் கஞ்சா போதையுடன் சென்று சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிந்தது. ரவுடி அபேத் மீது ஏற்கனவே நகை பறிப்பு, கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை சிறைக்கு சென்று வந்தும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.