கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முழுவதும் பெரும்பாலும் விவசாயிகள் உளுந்து பயிர் சாகுபடி செய்துள்ளனர். அது தற்சமயம் முதிர்ச்சி அடைந்து மகசூல் சேகரிக்கும் பக்குவத்தில் உள்ளதால் உளுந்து செடிகளை வயல்களில் இருந்து சேகரித்து சாலையில் காய வைத்துள்ளனர். நன்கு காய்ந்து உளுந்து பயிர் தனியாக வரும் நிலையில் கொடியை அப்புறப்படுத்தி உளுந்து பயிரை சேகரித்து வருகிறனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், உளுந்து நல்ல விலைக்கு விற்பனை ஆகிறது. காய்ந்த உளுந்து செடிகள் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக உள்ளது. உழுத மாட்டுக்கு உளுந்து செடியை போடு என்ற சொல் வழக்கு இப்பகுதியில் உள்ளது. உளுந்து செடிகள் தின்று வளரும் ஆடு, மாடுகள் நன்கு தேர்ச்சியுடன் இருக்கும். கறவை மாடுகள் அதிக அளவில் பால் கொடுக்கும். உளுந்து பயிரை பொறுத்தவரை ஆடு, மாடுகளுக்கும் தீவனம் ஆவதால் அதிகளவில் உளுந்து சாகுபடி செய்து வருகின்றனர் என்றனர்.