ஒரே கேக்கில் 3 ஃப்ளேவர்!
அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் வருகிறது. தீபாவளி என்றவுடன் எப்படி பலகாரங்கள் ஞாபகம் வருமோ, அதேபோல கிறிஸ்துமஸ் என்றவுடன் கேக்குகள்தான் ஞாபகம் வரும். கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் தங்களது நண்பர்கள்,உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கு கேக்குகளைத் தந்தே மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வார்கள். முன்பெல்லாம் கேக்குகள் பொதுவாக கடைகளில்தான் வாங்கப்படும். ஆனால் இப்போது பலர் தாங்களாகவே கேக் தயாரிப்பில் இறங்கி அசத்திவிடுகிறார்கள். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த அசிரா பேகம் என்பவர் ஹாபியாக வீட்டிலேயே கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்கத் தொடங்கி, இப்போது அதை ஒரு ப்ரொபஷனலாகவே மாற்றி இருக்கிறார். பலர் இவரது கேக் மற்றும் குக்கீஸ்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்கிறார்கள். அசிரா பேகத்தை நாம் சந்தித்தபோது, தனது கேக், குக்கீஸ் தயாரிப்பு அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
“சென்னைதான் எனக்கு சொந்த ஊரு.
பி.காம் (கம்பியூட்டர் அப்ளிகேசன்) படித்திருக்கிறேன். சிறுவயது முதலே கேக் மற்றும் குக்கீஸ் தயாரிப் பதில் அதிக ஆர்வம். யூடியூப் சேனல்கள், சமையல் புத்தகங்களைப் படித்துதான் கேக் தயாரிக்கக் கற்றுக்கொண்டேன். அமைந்தகரையில் உள்ள எனது வீட்டில் ஆரம்பத்தில் சாதாரண வகை கேக்கு களைத்தான் செய்தேன். அதன்பின்னர், வெனிலா, பட்டர் ஸ்காட்ச், ஸ்பாஞ்ச், சாக்லேட், பானா வால்நட் கேக், ட்ரை கேக், ப்ளம் கேக், பிரெஷ் கிரீம், பழங்கள் என பல ப்ளேவர்களில் கேக் செய்யத் தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, பார்ட்டிகள் போன்றவற்றிற்கு ஆர்டர்கள் வரத் தொடங்கியது. அதன்பின்னர், முழுநேர வேலையாக கேக் செய்வதைத் தொடங்கிவிட்டேன். கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு என்றாலே கேக்குகளின் ராஜ்ஜியம்தான். தற்போது அந்த வரிசையில் குக்கீஸ் வந்துவிட்டது. கிறிஸ்துமஸ்க்கு பயன்படுத்தும் கேக் தயாரிப்புக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறேன்.
இந்த கேக்குகள் தயாரிக்க சுமார் 1 மாத காலம் தேவைப்படும். ஏனென்றால் இந்த கேக்கில் சேர்க்கப்படும் ட்ரை புரூட்ஸ் எல்லாவற்றையும், ஒரே கலவையாக சேர்த்து சில நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை பதப்படுத்தி, கிறிஸ்துமஸ் நெருங்கும் நேரத்தில் கேக்குகளை தயார் செய்ய வேண்டும்.எனது கேக் தயாரிப்புகள் எதிலும், பேக்கிங் சோடா பயன்படுத்துவதே கிடையாது. பொதுவாக, கேக்கின் மிருதுத் தன்மைக்காக பேக்கிங் சோடா இல்லாமல் யாரும் கேக் தயார் செய்ய மாட்டார்கள். ஆனால், பேக்கிங் சோடா உடலுக்கு கெடுதல் என்பதால், பேக்கிங் சோடா சேர்க்காமல், அதற்கு இணையான இயற்கையான மூலப்பொருள்கள் சேர்த்து கேக்குகளைத் தயாரிக்கிறேன். இந்தக் கேக்குகளை ஒரு வாரம் வரை நார்மல் டெம்ப்ரேச்சரில் வெளியே வைத்திருந்தாலும் ஒன்னும் ஆகாது. சுவையும் குறையாது. பேக்கிங் சோடா பயன்படுத்தாததால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாது.
இதுதவிர, சிறுதானியங்களைப் பயன்படுத்தியும் கேக்குகள் தயாரிக்கிறேன். இதை நானே முயற்சி செய்து கற்றுக்கொண்டேன். எனது மல்டி மில்லட்ஸ் கேக் மற்றும் ராகி கேக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல நீரிழிவு நோயாளிகளுக்காக ஸ்பெஷலாக சர்க்கரை சேர்க்காத கேக்குகளை தயார் செய்கிறேன், மேலும், ப்ரவுன் சுகர், நாட்டுச் சர்க்கரை, வெல்லம் போன்றவற்றைப் பயன் படுத்தியும் வித்தியாசமான சுவைகளில் கேக்குகள் தயாரிக்கிறேன். இதற்கு எல்லாம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பேக்கரியில் பயன்படுத்தப்படும் பிரெஷ் க்ரீம்களை பயன்படுத்தாமல், நானே பிரெஷ் கிரீம்கள் தயாரித்து கேக் செய்கிறேன். இந்த வகை கேக்குகளை பிரிட்ஜில்தான் ஸ்டோர் செய்து வைக்க முடியும். அதேபோல பிரெஷ் பழங்களை வைத்தும் தயார் செய்கிறேன். பொதுவாக, கடைகளில் பழங்களைக் கொண்டு கேக் செய்யும்போது, அதன் சுளைகளை எடுத்து பிரசர்வெட்டிவ் பயன்படுத்தி, பதப்படுத்தி பின்னர்தான் செய்வார்கள்.
ஆனால், நான் பழங்களில் இருந்து சுளைகளைப் பிரித்தெடுத்து பதப்படுத்தாமல், பிரெஷ்ஷாகவே வைத்து செய்கிறேன். இதனால், இந்த வகை கேக்குகள் கூடுதல் சுவையுடன் இருக்கும். மேலும், நானே புதுசாக மூன்று லேயர் கேக் ஒன்றை ட்ரை செய்திருக்கிறேன். அதில் ஒவ்வொரு லேயேரும் ஒவ்வொரு நிறத்தில், ஒவ்வொரு ப்ளேவர் களில், வெவ்வேறு சுவைகளில் இருக்கும். உதாரணமாக, ஒரு லேயேர் பழங்களின் சுவையில் இருந்தால், அடுத்த லேயர் நட்ஸ் நிறைந்திருக்கும். மற்றொரு லேயர் சாக்லேட் சுவையில் இருக்கும். இப்படி ஒரே கேக்கில் மூன்று விதமான சுவை இருக்கும். கடந்த மாதம் வாடிக்கையாளர் ஒருவர் அவரின் தேவைக்கேற்ற வடிவம் மற்றும் ருசியில் கேக்குகளைத் தயார் செய்து கொடுக்க சொல்லிக் கேட்டிருந்தார். அவரின் விருப்பத்திற்கு ஏற்ப கேக் தயார் செய்து கொடுத்தேன். அதைச் சாப்பிட்ட அனைவருக்கும் பிடித்திருந்தது. இதைத் தொடர்ந்து அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் என நிறைய ஆர்டர்கள் வருகிறது.
இந்த மாதிரி கேக்குகள் எல்லாம் தயார் செய்ய 2 முதல் 3 நாள்கள் ஆகும். மேலும், நான் ரசாயனம் எதுவும் கலக்காமல் செய்வதால், இன்னும் கூடுதல் நேரம் ஆகிறது. வேலையும் கூடிவிடுகிறது. இந்த வகை கேக்குகளைப் பொதுவாக குழந்தை களின் பிறந்தநாளுக்காக ஆர்டர் செய்வார்கள். இதனால், வயிற்றுக்கு கெடுதல் வராத வகையில் பார்த்துப் பார்த்து செய்வேன். குழந்தைகளின் பிறந்தநாளுக்கு தயார் செய்யும் கேக்குகளில் அவ்வளவாக செயற்கை நிறங்களைச் சேர்க்கவும் நான் விரும்ப மாட்டேன். நிறங்கள் அதிகம் கேட்டால் பெற்றோரிடம் முன்பே கூறிவிடுவேன். அதேசமயம், முடிந்தளவு கூடுதல் சுவை சேர்த்து இயற்கை நிறங்களையே பயன்படுத்துகிறேன். அளவான இனிப்பும், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத ருசியும் இருப்பதால் ஏராளமானோர் தங்களின் வீட்டு விசேஷத்திற்கு தேவையான கேக்குகளை எங்களிடம் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கிறார்கள். இதையே என்னுடைய முதல் வெற்றியாக கருதுகிறேன்” என்கிறார்.
-சுரேந்திரன்