Sunday, June 16, 2024
Home » பளபள சருமம் தரும் பழச்சாறுகள்

பளபள சருமம் தரும் பழச்சாறுகள்

by Porselvi

சருமம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் இருக்க வேண்டும் என அனைவருமே எதிர்பார்ப்போம். ஆனால் மேக்கப் போன்றவற்றை பயன்படுத்தாமல் இயற்கையான பழங்களின் மூலமே சருமத்தை பிரகாசமாக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? சருமத்தை பளபளப்பாக்கும் சில ஜூஸ்கள் இதோ…

வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை ஜூஸ்

வெள்ளரிக்காயில் அதிகம் நீர் நிறைந்துள்ளது. ஆகையால் இது உங்கள் சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. கற்றாழை உங்களுக்கு ஏற்படும் அழற்சி, வீக்கம் போன்றவற்றை குறைத்து சருமத்தை சீராக்குகிறது. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து ஜூஸாக குடித்தால் மணப்பெண்ணின் சருமம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் மாறும்.

தக்காளி மற்றும் செலரி ஜூஸ்

தக்காளியில் லைகோபீன் என்ற கலவைகள் அதிகமாக உள்ளது. இது புற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. அது மட்டுமின்றி நமது உடலில் கொலஜன் உற்பத்தி ஆவதற்கும் காரணமாக இருக்கிறது. வைட்டமினும், மினரலும் அதிகமாகவுள்ள செலரியும், தக்காளியும் ஒன்றாக சேரும் போது சருமத்திற்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கிறது.

கீரை மற்றும் எலுமிச்சை ஜூஸ்

கீரைகளில் பலவிதமான ஊட்டச்சத்துகள் உள்ளதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இது நம் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி சருமம் சீராவதற்கு உதவுகிறது. இந்த கீரை ஜூஸில் சிறிது எலுமிச்சைப் பழத்தையும் சேர்த்தால், உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் சி கிடைக்கிறது. இது கொலஜன் உற்பத்திற்கு மிகவும் முக்கியமாகும்.

ஏபிசி ஜூஸ்
(ஆப்பிள், பீட்ரூட், கேரட்)

ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகியவற்றை ஒன்றாக கலந்த ஜூஸில், ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் பலவித வைட்டமின்கள் நிரம்பியுள்ளது. இது நம் சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பை தருகிறது. கேரட்டில் அதிகளவு பீட்டா கரோட்டின் உள்ளது. பீட்ரூட்டை எடுத்துக் கொண்டால் இரும்புச்சத்தும், வைட்டமின் சி, மாக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை உள்ளது. ஆப்பிள் பழம் உங்கள் உடலுக்கு தேவைப்படும் நார்ச்சத்து மற்றும் ஆண்டி ஆக்சிடெண்டை தருகிறது. சருமத்தை அழகாக்கும். இந்த ஏபிசி ஜூஸை மணமகள் அவசியம் குடிக்க வேண்டும்.

மாதுளை மற்றும் ஆரஞ்சு ஜூஸ்

ஃப்ரீ ரேடிக்கலை (Free radical) எதிர்த்துப் போராடும் ஆண்டி ஆக்சிடெண்ட் அதிகளவில் மாதுளைப் பழத்தில் உள்ளது. இது நமது சருமத்தை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இது நமது சருமத்திற்கு இளகுத்தன்மையும், பிரகாசத்தையும் தருகிறது.

தர்பூசணி மற்றும் புதினா ஜூஸ்

பிரகாசமான சருமத்திற்கு நீர்ச்சத்து அவசியமாகும். அதை கச்சிதமாக
தர்பூசணி நிறைவேற்றும். இதில் புதினாவும் சேர்ப்பதால் சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, சருமத்தில் ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்துகிறது.

ஆப்பிள் மற்றும் கிவி ஜூஸ்

சருமத்திற்கு பயன்படக் கூடிய ஆண்டி ஆக்சிடெண்ட் ஆப்பிள் பழத்தில் உள்ளது. கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ அதிகமுள்ளது. இது நமது சருமம் ஆரோக்கியமாக இருப்பதற்கு மிகவும் தேவைப்படும். இந்த இரண்டு பழங்களையும் சேர்த்து ஜூஸாக்கி குடித்தால் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்கும்.

கிரான்பெர்ரி ஜூஸ்

ஃப்ளாவோனாய்டு மற்றும் பாலிபீனால் போன்ற ஆண்டி ஆக்சிடெண்ட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ ஆகியவை கிரான்பெர்ரியில் அதிகளவு உள்ளது. இது சருமம் பளபளப்பாக இருப்பதற்கு அவசியமாகும். இந்த ஜூஸ் உடல் எடை குறைப்புக்கும் உதவுகிறது.

– கவிதா பாலாஜிகணேஷ்

You may also like

Leave a Comment

15 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi