சென்னை: மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்தது. மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள், காவல்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 3லட்சத்து 71 ஆயிரத்து 355 வீரர்கள், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். அவர்களில் 27ஆயிரம் பேர் வெற்றிப் பெற்று மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்க தகுதிப் பெற்று உள்ளனர். இந்நிலையில் மாநில அளவிலான போட்டி, இன்று மாலை சென்னை நேரு அரங்கில் தொடங்குகிறது. போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
போட்டிகள் இன்று முதல் ஜூலை 25ம் தேதி வரை 10 இடங்களில் நடைபெற உள்ளன. கபடி, வாலிபால், கூடைப்பந்து போட்டிகள் நேரு உள் அரங்களிலும், சிலம்பம், பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் மேலக்கோட்டை விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்திலும், டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கம் அரங்கத்திலும், கால்பந்து, செஸ், பளுதூக்குதல், தடகளம் ஆகியவை நேரு அரங்கிலும், நீச்சல் போட்டிகள் வேளச்சேரி நீச்சல் அரங்கிலும், பீச் வாலிபால் போட்டி ெமரினா கடற்கரையிலும், ஹாக்கிப் போட்டிகள் ராமசந்திரா கல்லூரி வளாகத்திலும், கிரிக்கெட் போட்டிகள் எஸ்டிஏடி-புதூர், மெரினா வளாகம், குருநானக் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகத் திடல், லயோலா கல்லூரி, எஸ்ஆர்எம்ஐஎஸ்டி ஆகிய இடங்களில் நடைபெறும்.