Monday, June 17, 2024
Home » சிலிண்டர் விலை முதல் இஸ்ரேல் போர் பிரச்னை வரை பிரதமருக்கு தினமும் கடிதம் அனுப்பும் கோவை பெண்: இதுவரை 264 கோரிக்கைகளை அனுப்பியுள்ளார்

சிலிண்டர் விலை முதல் இஸ்ரேல் போர் பிரச்னை வரை பிரதமருக்கு தினமும் கடிதம் அனுப்பும் கோவை பெண்: இதுவரை 264 கோரிக்கைகளை அனுப்பியுள்ளார்

by Dhanush Kumar

கோவை: ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் பொதுமக்கள் தங்களின் தேவைகள் குறித்து கடிதம் எழுதுவதும், மனு அனுப்புவதும் அரசியல் கட்சிகள் இயக்கங்களின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்று. இந்நிலையில், கோவையை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரதமருக்கு தினமும் கோரிக்கை கடிதம் எழுதி அனுப்பி வருகிறார். கோவை காந்திமாநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. அரசு ஊழியர். இவரது மனைவி கிருத்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இல்லத்தரசியான இவர், கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மகளிர் தினத்தன்று, பிரதமர் மோடிக்கு முதல் கடிதம் ஒன்று எழுதினார். அதில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டி மனு அனுப்பினார். இரண்டாவதாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல் கோரி மனு எழுதியிருந்தார். தொடர்ந்து ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தல், நிர்பயா அமைப்பு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு அதிகமாக தருவது, பிஎஸ்என்எல் 5ஜி சேவை நிறுவுவது, தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்துவது என துவங்கி இஸ்ரேல் – காசா போர் வரை கிருத்திகா மனுவாக எழுதினார். இதுவரை 264 கோரிக்கைகள் உள்ளடக்கிய கடிதங்களை எழுதி அனுப்பி இருக்கின்றார்.

சட்ட நாளான நேற்று தனது 264வது கடிதத்தை எழுதினார். இதில் இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அடிப்படையில் கடமைகள் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி கோரிக்கை மனுவை கடிதமாக எழுதி பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி இருக்கின்றார். நாட்டு மக்களின் பல்வேறு பிரச்னைகளை மையப்படுத்தி, தொடர்ந்து இவர் எழுதும் கடிதத்திற்கு பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து அக்னாலேஜ்மண்டு தருகின்றனர். நாள்தோறும் காலை 10 மணிக்கு பிரதமர் மோடி அலுவலகத்திலிருந்து போனில் அழைத்து, மனு குறித்து விவாதிக்கின்றனர். இது குறித்து கிருத்திகா கூறுகையில், ‘‘என் கணவர் உட்பட குடும்பத்தாரின் முழு ஒத்துழைப்பு தரவே, இப்பணியை தடையின்றி செய்ய முடிகிறது. அரசியல் கட்சி அமைப்புகள் தெரிவிக்கும் அதே கோரிக்கையை நான் தெரிவித்து வந்தாலும், அக்கோரிக்கைகள் நிறைவேறும்போது அதில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதாக நினைத்து மன நிறைவடைகிறேன். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்ற தலைவர்களின் சித்தாந்தங்களை படித்து அறிந்திருப்பதால், பொதுமக்களின் நலன் சார்ந்து நாள்தோறும் இந்த கடித போக்குவரத்து பணியை தொடர இருக்கிறேன்’’ என்றார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

four × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi