புதுடெல்லி: வாட்ஸ் அப்பில் மிஸ்டு கால்கள், வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட 7 வகை மோசடிகள் அதிகமாக நடந்து வருவதாகவும் இதுகுறித்து பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(பிபிஆர்டி) வாட்ஸ் அப் சமூக வலைதளத்தில் நடக்கும் சைபர் குற்றங்கள்,நிதி மோசடிகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், வாட்ஸ் அப்பில் வேலை வாய்ப்புகள், முதலீட்டு திட்டங்கள் குறித்து போலியான அழைப்புகள் வருகின்றன. அதே போல் மிஸ்டு கால்கள்,ஆபாச வீடியோ அழைப்புகள் செய்து பணம் பறித்தல் உள்ளிட்ட 7 வகையான மோசடிகள் நடைபெறுகின்றன. மோசடி செய்பவர்கள் வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். மேலும் தீங்கிழைக்கும் செயலி, ரகசிய மென்பொருள் மூலம் பயனர்களின் வங்கி விவரங்கள், கடவு சொற்களை திருடி பண மோசடி செய்கின்றனர்.எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அறியப்படாத தகவல் தொடர்புகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் அவற்றுக்கு பதிலளிப்பதை தவிர்க்க வேண்டும் என பிபிஆர்டி தெரிவித்துள்ளது.