சென்னை: மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னத்திரை நடிகை மகாலஷ்மியின் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானார். இவர், தன்னிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார்.
அதில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசைவார்த்தைகளை கூறி தன்னை திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக கூறியிருந்தார். இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், செப்டம்பர் 7ம் தேதி ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்தனர்.
இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி ரவீந்தர் சந்திரசேகர் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, ரவீந்தர் சந்திரசேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ரவீந்தர் தரப்பில் புகாதாரருக்கு இரண்டு கோடி ரூபாய் அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு புகார்தாரர் தரப்பு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பண பரிவர்த்தனை தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தினால் மட்டுமே அதுகுறித்து தெரியவரும். இரண்டு வாரங்களில் 5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை ரவீந்தர் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.