திருப்பரங்குன்றம்: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சுமார் 85 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்புகளில் படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்களின் செமஸ்டர் தேர்வு விடைத்தாள்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து, திருத்தும் பணியை பல்கலை நிர்வாகம் அறிமுகம் செய்தது. இத்திட்டம் பல்கலை சிண்டிகேட் குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு அமல்படுத்தப்பட்டது. செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்தும் திட்டம் கடந்த ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வந்தது. ஆனால் இந்த திட்டத்தில் முறையாக டெண்டர் விடாமல், ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பல்கலைக்கழகம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இந்த வேளையில் துணைவேந்தரின் இந்த செயல் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழுவினர் உயர்கல்வி துறை செயலர் மற்றும் நிதி செயலர் ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ள மனுவில், ‘‘முறையாக டெண்டரின்றி குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்திற்கு மேல் வெளி நிறுவனத்திற்கு பல்கலைக்கழகம் கட்டணம் வழங்க வேண்டுமெனில் சிண்டிகேட், நிதிக்குழுவில் ஒப்புதல் வாங்கி டெண்டர் விட வேண்டும். ஆனால் இந்த விதியை பின்பற்றாமல் துணைவேந்தர் மற்றும் தேர்வாணையர் ஆகியோர் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறியுள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் மீது ஊழல் புகாரில் அளிக்கப்பட்டுள்ள அந்த சர்ச்சை ஓய்வதற்குள் காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தேர்வாணையர் மீது பல்கலைக்கழக பேராசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவினரே புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.