மும்பை: மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோஷி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86. சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் மறைந்த பால் தாக்கரேவுக்கு நெருக்கமானவருமான மனோகர் ஜோஷிக்கு கடந்த 21ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மும்பையில் உள்ள பிடி ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். மனோஜ் ஜோஷியின் மறைவுக்கு பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பைஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மும்பையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட மனோகர் ஜோஷியின் உடலுக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆளுநர் ரமேஷ் பைஸ் உள்ளிட்ட தலைவர்களும் கட்சி தொண்டர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.