மும்பை: பகையை மறந்து நட்பாக பழகலாம் எனக்கூறி சிவசேனா நிர்வாகியின் மகனை சுட்டுக் கொன்று நண்பன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் வினோத் கோசல்கரின் மகன் அபிஷேக் என்பவருக்கும், மோரிஸ் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தங்களது முன்பகையை மறந்து, ஒருவருக்கு ஒருவர் நட்பாக பழகுவோம் என்று இருவரும் சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில் அபிஷேக்கை தனது தஹிசார் பகுதி அலுவலகத்திற்கு மோரிஸ் வரவழைத்தார். இருவரும் பேஸ்புக் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்தனர். ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டனர். மோரிஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் மற்ற நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட மூன்று நிமிட பேஸ்புக் நேரலைக்கு பின்னர், திடீரென பேஸ்புக் லைவிலிருந்து எழுந்த மோரிஸ், நான்காவது நிமிடத்தில் அபிஷேக்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். சம்பவ இடத்திலேயே அபிஷேக் உயிரிழந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் மோரிசும் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு, அப்பகுதியை சேர்ந்த சிலர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேற்கண்ட சம்பவத்தால் தஹிசார் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த போலீசார் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.