தஞ்சாவூர் : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில், பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 4 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பாதாள சாக்கடை கழிவுநீர் சமுத்திரம் ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் பாதாள சாக்கடைக்காக ஆங்காங்கே குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாநகரில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருசில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பாதாள சாக்கடை குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சாலையில் அடிக்கடி இதுபோன்று கழிவுநீர் வெளியேறி வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், வெளியேறும் கழிவுநீர் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனே அடைப்பை சரி செய்து பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் வெளியேறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.