சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில், மீன்வளத்துறை சார்பில் ரூ.136.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதை பண்ணைகள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ.6 கோடியே 94 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர், மாணவியர் விடுதிக் கட்டிடம், கல்வித் தொகுதியின் கூடுதல் கட்டிடம் மற்றும் அயிரை மீன் ஆராய்ச்சி நிலையக் கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தெற்கு பகுதியில் ரூ.50 கோடி செலவில் தூண்டில் வளைவுடன் மேம்படுத்தப்பட்டுள்ள மீன் இறங்குதளம் மற்றும் கீழமுந்தல், மணப்பாடு, அமலிநகர் மீனவ கிராமத்தில் புதிய மீன் இறங்குதளம் மற்றும் கடம்பாவில் ரூ.5 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள புதிய அரசு மீன் விதை பண்ணையும் அதேபோல், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி டாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 36 தங்கும் அறைகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், பணியாளர் அறை உள்ளிட்ட வசதிகள் கொண்ட இரண்டு தளங்களுடன் ரூ.5 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர், மாணவியர் விடுதி என மொத்தம் ரூ.6 கோடியே 94 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், செயலாளர் மங்கத் ராம் சர்மா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.