தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகர் 6வது தெருவில் ஜெகன் என்பவருக்கு சொந்தமான மர குடோன் இயங்கி வருகிறது. இங்கு, மரங்களை சேகரித்து வைத்து, மரப்பொருட்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று குடோன் அருகில், கட்டிட வேலைக்காக வெல்டிங் செய்தபோது அதிலிருந்து தீப்பொறி சிதறி, அருகில் இருந்த குடோனில் உள்ள மர துகள்களில் தீப்பற்றியது. இதை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
சிறிது நேரத்தில், குடோன் முழுவதும் தீ பரவி, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கும், ஆர்கே நகர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் குடோனில் இருந்த மரங்கள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது.