குன்னூர், ஏப்.22: கோடை அதிக வெப்பம் காரணமாக ஆங்காங்கே ஏற்படும் தீ விபத்துகளை எவ்வாறு தடுத்து கையாளுவது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பாஸ்டியர் ஆய்வகத்தில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்படுவதால் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் திவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குன்னூரில் பாஸ்டியர் ஆய்வகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நடத்தி காண்பித்தனர். இதில் தீ விபத்து ஏற்படும் போது அங்கு பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது மேலும் வீடுகளில் காஸ் கசிவு ஏற்பட்டு விபத்து நடக்கும் போது எவ்வாறு தீயை அணைப்பது மற்றும் அலுவலங்கள் தொழிற்சாலைகளில் விபத்து ஏற்படும் போது அதனை எவ்வாறு கையாள்வது என செயல்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாஸ்டியர் ஆய்வகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.