சென்னை: சேலம் மாவட்டத்தில் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம், சேலம் வட்டம், எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த நடேசன், த/பெ.சென்றாயன் (வயது 50), சதீஷ்குமார், த/பெ.கந்தசாமி (வயது 35) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேலம், சேர்ந்த வசந்தா, க/பெ.பழனிசாமி, (வயது 45). மோகனா, க/பெ.வடிவேல் (வயது 38), மணிமேகலா, க/பெ.ராஜா (வயது 36), மகேஸ்வரி, எம்.கொல்லப்பட்டியைச் க/பெ.வெங்கடேசன் (வயது 32), பிரபாகரன், த/பெ.அண்ணாதுரை, (வயது 31) மற்றும் பிருந்தா, க/பெ.மோகன் (லேட்) (வயது 28) ஆகிய ஆறு பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.