சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் கடந்த மாதம் தங்க நகைகள் திருடு போன நிலையில் தற்போது அவரது வீட்டு பணி பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 10 தல, தானா சேந்த கூட்டம், தங்களான், மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் கே.ஈ.ஞானவேல் ராஜா இவர் மனைவி மேகா, இவர்கள் தி.நகரில் வசித்து வரும் நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி மேகாவிற்கு பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது மேகாவிற்கு அதிகப்படியான பரிசு பொருட்கள் வந்ததாகவும் அந்த பரிசு பொருட்களில் 2 தங்க நெக்லஸ் காணாமல் போனதாக கூறப்படுகிறது. உடனடியாக இது தொடர்பாக அவரது வீட்டில் 4 வருடங்களாக பணி பெண்ணாக வேலை செய்த லட்சுமி என்பவரிடம் கேட்டபோது அவர் சரிவர பதில் சொல்லாமல் இருந்ததாகவும் கடந்த 14ம் தேதிக்கு மேல் அவர் வேலைக்கு வராமல் நின்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஞானவேல் ராஜாவிற்கு பணி பெண் மீது சந்தேகம் இருப்பதாக கூறி நேற்று மாம்பலம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக மாம்பலம் போலீசார் லட்சுமி என்பவரின் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரணை நடத்திவிட்டு சென்றதாகவும், அவர் தான் இந்த நகைகளை திருடவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்திய பின்பு தொடர்ச்சியாக மனஉளைச்சலில் இருந்த நிலையில் அவர் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் இருந்த அவரது குடும்பத்தார் அவரை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக டி.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.