இந்தியாவைப் பொறுத்தவரையில் இரண்டு பருவங்களாக விவசாயம் பார்க்கப்படுகிறது. இதில் காரி, ராபி என்பதுதான் விவசாயத்தின் பருவங்கள். காரி பருவமானது ஜூலை முதல் ஜூன் வரையிலும், ராபி பருவம் என்பது அக்டோபர் முதல் மார்ச் வரையும் கணக்கிடுவார்கள். இந்தக் காலத்தில் தென்மாநிலங்களில் கேழ்வரகு, மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை, நெல் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்கின்றனர். வடமாநிலத்தில் பருத்தி, மக்காச்சோளம், நெல், சோளம், கம்பு, உளுந்து போன்ற பயிர் வகைகளை சாகுபடி செய்வதில் மும் முரம் காட்டுவார்கள். அதேபோல ராபி பருவத்தில் வட மாநிலங்களில் கோதுமை, ஆளி விதைகள், கடுகு, பருப்பையும், தென்மாநிலங்களில் மக்காச்சோளம், கேழ்வரகு, நெல், நிலக்கடலை, கம்பு போன்றவற்றையும் விளைவிக்கின்றனர்.
இந்நிலையில்தான் ஒன்றிய அமைச்சரவை நடத்திய கூட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தேதி முதல் மார்ச் மாதம் 31ம் தேதி வரையிலான ராபி பருவ காலத்தில், விவசாயிகளுக்கான ஊட்டச்சத்து சார்ந்த உர மானியத்தை மாற்றி அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரையிலான காரிப் பருவ காலத்தில், பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் உரங்களுக்கான ஊட்டச்சத்து சார்ந்த மானிய விகிதங்களையும் நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில் நடப்பு காரிப் பருவ காலத்தில் யூரியா உரத்துக்கு 70 ஆயிரம் கோடி ரூபாயும், டிஏபி-க்கு 38 ஆயிரம் கோடி ரூபாயும் மானியம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது யூரியா உரம் ஒரு மூட்டை ரூ.276க்கும், டிஏபி (டை-அமோனியம் பாஸ்பேட்) உரம் ஒரு மூட்டை ரூ.1,350க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் நைட்ரஜன் உரத்துக்கான மானியம் ஒரு கிலோவுக்கு ரூ.76 என்ற அளவிலும், பாஸ்பரசுக்கு கிலோவுக்கு ரூ.41 வீதமும், பொட்டாசியத்துக்கு கிலோவுக்கு ரூ.15 வீதமும், சல்ஃபர் கிலோவுக்கு ரூ.2.8 வீதமும் மானியம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு இவற்றுக்கான மானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது மானியம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.