சென்னை: ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு கழிவறை வசதி செய்து தர வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலருக்கு எழுதியுள்ள கடிதம்: பொதுவிநியோக திட்டம் ரேஷன் கடை பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதியை உரிய கணக்கில் செலுத்திடவும், அதன் விவரத்தை பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சம்பள கணக்கு சீட்டு விவரம் என பணியாளர்களுக்கு தெரிவிப்பது சம்பந்தமான அரசாணை வெளியிட்டு 5 வருடங்களாகியும் இதுவரை நடைமுறைப்படுத்தாமல் உள்ளதை நடைமுறைப்படுத்த வேண்டும்.இதுதவிர ரேஷன் கடைகளில் பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருவதையொட்டி கடைகளில் கழிவறை வசதி இல்லாத நிலையில் பணியாளர்களின் சிரமத்தை போக்கிடும் வகையில் கழிவறை வசதி செய்து தரப்பட வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைக்கிறோம்.