புவனேஷ்வர்: ஒடிசாவில் அரசு பெண் ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல் விடுமுறை அறிவித்து ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒடிசா அரசு அண்மையில் அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு விடுமுறை அறிவித்தது. மேலும், பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணி புரியம் மகளிர் தொகுதி மானிய பணியாளர்களுக்கு இரு மகப்பேறுகளுக்கு 180 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அறிவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் அரசு பெண் ஊழியர்களுக்கு கூடுதலாக 10 நாட்கள் சாதாரண விடுப்பு அறிவித்து முதல்வர் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வௌியிட்ட செய்திக்குறிப்பில், “தற்போது அரசு பெண் பணியாளர்கள் 15 நாள் சாதாரண விடுப்பு பெறுகின்றனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து அவர்கள் ஆண்டுக்கு கூடுதலாக 10 விடுப்புடன், ஆண்டுக்கு 25 விடுப்பு பெறுவார்கள். அரசு பெண் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வீட்டு பொறுப்புகள் மற்றும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு முதல்வர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.