Tuesday, May 21, 2024
Home » தப்பி ஓடும்போது தவறி விழுந்து கால் முறிந்தது கோவையில் பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது

தப்பி ஓடும்போது தவறி விழுந்து கால் முறிந்தது கோவையில் பிரபல வழிப்பறி கொள்ளையன் கைது

by Lakshmipathi

*கத்தி, அரிவாள் பறிமுதல்

கோவை : கோவை கவுண்டம்பாளையம் அருகே நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (31). இவர், நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள ராமலிங்கம் என்பவரது டீக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் கடையில், கல்லாவில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கல்லா மேஜையை தட்டி, புகையிலை கேட்டார். அதற்கு அவர் இங்கு புகையிலை விற்பனை செய்வதில்லை எனக்கூறினார்.

இதனால், ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமி, அங்கிருந்த சோடா பாட்டில், மேஜை, நாற்காலிகளை உடைத்து சேதப்படுத்தினார். கேஷியர் பிரபாகரனின் இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரபாகரன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

ரகளையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் இந்திரா நகரை சேர்ந்த மதன்குமார் (27) என்பவரை மடக்கிப்பிடித்து கைது செய்ய முயன்றனர். அப்போது அவர் தப்பி ஓடினார். ஆனாலும், போலீசார் துரத்திச்சென்றனர். இதில் அவர் அங்குள்ள பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட முயன்றார். இதில், அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஓட முடியாமல் புரண்டு, தவித்த மதன்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற உத்தரவுப்படி, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட மதன்குமார் மீது, கோவை காட்டூர், போத்தனூர், சாயிபாபாகாலனி, ரத்தினபுரி, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்பட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இவரிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

eighteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi