Wednesday, May 15, 2024
Home » அச்சம் வேண்டாம்

அச்சம் வேண்டாம்

by Karthik Yash
Published: Last Updated on

நாட்டில் மீண்டும் கொரோனா (ஒமிக்ரான்) தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சளி மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. உடனே மருத்துவர்களை அணுகி அவர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் கொரோனா வைரசால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்ததை மறக்க முடியாது. முக்கியமாக, மக்களின் வாழ்வாதாரம் பாதித்ததோடு, சிறு, குறு உள்ளிட்ட தொழில்களும் அடியோடு முடங்கின. கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்த பிறகு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பினர்.

தற்போது, கொரோனா தொற்று சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக, லேசான பாதிப்புடன் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும். பாதிப்புக்கு உள்ளானவர்கள், தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிக அவசியம். கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா வைரஸ் தொற்று விஷயத்தில் கடந்த காலங்களை போல் இல்லாமல், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கொரோனா குறித்த முக்கிய தகவல்களை மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.

இதில், காலதாமதம் வேண்டாம்.தமிழகத்தை பொறுத்தவரை சுகாதாரத்துறையில் வலுவான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, வியூகங்கள் வகுக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மக்கள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்தனர். சுகாதாரத்துறையில் நவீன தொழில்நுட்பம் கையாளப்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகளின் தரமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் எவ்வித அச்சமுமின்றி நோயாளிகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சுகாதாரத்துறை நாட்டிற்கே வழிகாட்டி வருகிறது. அந்த அளவுக்கு உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வர அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு மக்களிடம் முழுமையாக சேர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவில் இருந்து எப்படி தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், அலட்சியமாக கொரோனா வைரசை எடுத்துக் கொள்ளக்கூடாது. இவ்விஷயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம். முக்கியமாக, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

தற்போது, காலநிலை மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. பாதிப்பு ஏற்பட்டால், இது காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்று தானாகவே முடிவு செய்துக்கொள்ளக் கூடாது. மருத்துவர்களிடம் சென்று உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் நீண்ட நாட்கள் தொடரும் பட்சத்தில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியது கட்டாயம். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியே சுற்றாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். முக்கியமாக, நாட்டிலேயே தமிழ்நாடு சுகாதாரத்துறை சிறந்து விளங்கி வருகிறது. இதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது கட்டாயம்.

You may also like

Leave a Comment

2 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi