கடலூர்: தந்தை இறந்த நிலையிலும், கடலூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவி 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் ரத்தின வடிவேல். ஓய்வு பெற்ற சர்வேயரான இவருக்கு இன்று அதிகாலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார். உயிரிழந்த ரத்தின வடிவேலுக்கு ராஜேஸ்வரி (16) என்ற மகள் உள்ளார். இவர் கடலூர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று 12ம் வகுப்பு இயற்பியல் பொது தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தந்தை இறந்ததால் மிகவும் துயரம் அடைந்த மாணவி கதறி அழுதார். இருப்பினும் இயற்பியல் தேர்வு எழுதுவதற்காக அவர் பள்ளிக்கு வந்தார். இதை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அவருக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதையடுத்து ராஜேஸ்வரி தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதினார். தேர்வு முடிந்ததும் ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.