பழங்காலத்தில் இருந்தே நமது பாரம்பரியத்தோடு நெருங்கிய தொடர்புடையது வாழை இலை. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளிலும், வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கும், கோயில் விழா உள்ளிட்ட அனைத்து விழாக்களிலும் வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டால்தான் அந்த விருந்துக்கே மரியாதை. மரியாதையின் வெளிப்பாடு மட்டுமல்ல, சுகாதாரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது இந்த வாழை இலை விருந்து. இன்றைக்கும் ஏராளமான ஓட்டல்களில் வாழை இலையில்தான் உணவு பரிமாறப்படுகிறது. இதைத்தான் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களும் விரும்பி எதிர்பார்க்கிறார்கள்.
வாழை இலையில் கட்டி வழங்கப்படும் பார்சல் உணவுக்குக் கூட தனி மவுசு இருக்கிறது. இப்படி மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ள வாழை இலைக்காகவே, வாழையைப் பல விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழை இலை சாகுபடி அதிகஅளவில் நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை பகுதி கிராமங்களில் அதிகளவில் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகிறார்கள். இதனால் வாழை இலைக்கு பெயர் பெற்ற ஊராக விளங்குகிறது தஞ்சாவூர். வாழை இலைகளை மிக அழகாக கத்தரித்து தஞ்சாவூர் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்கால், திருச்சி, சென்னை என தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு இங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். இந்நிலையில் தஞ்சாவூரில் உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில், உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளுக்கு வாழை இலை சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.
திருச்சி அருகே உள்ள போதாவூரில் இயங்கி வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உத்தரபிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு வாழை சாகுபடி குறித்து கடந்த வாரம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள வடுகக்குடி பகுதியைச் சேர்ந்த முன்னோடி வாழை விவசாயியான எம்.மதியழகன் தோட்டத்தில் உத்தரபிரதேச மாநில முன்னோடி விவசாயிகள், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு களப்பயிற்சி வழங்கப்பட்டது.
இதில், வாழை இலை உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனை, அதிலிருந்து கிடைக்கும் வருவாய் விபரம் ஆகியவை குறித்து மதியழகன் விளக்கினார். மேலும் வாழை இலையின் பயன்பாடு, பூச்சி, நோய்த் தாக்குதல், இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளும் விதம், வாழைத்தார், வாழை மரங்களைப் பாதுகாக்கும் முறை, வாழைக்குத் தேவையான உரங்கள், நுண்ணுட்டச் சத்துக்கள், வாழை இலையினால் கிடைக்கும் ஆரோக்கியம், அதை எப்படி பக்குவமாக கையாள்வது, பல்வேறு மாவட்டங்களுக்கு எப்படி அனுப்பி வைப்பது? வாழை இலைகளைத் தேர்வு செய்யும் விதம் போன்றவை குறித்தும் விளக்கிக் கூறினார்.இப்பயிற்சி முகாமில் தேசிய வாழை ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானிகள் ஆர்.மோகனசுந்தரம், கிரிபாசு, மக்கள் தொடர்பு அலுவலர் ரவிசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.