டெல்லி: பருப்பு வகைகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்திரப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த மாதம் மீண்டும் போராட்டத்தை தொடங்கின. டெல்லியின் எல்லைப் பகுதியில் திரண்ட விவசாயிகளால் பதட்டம் உருவான நிலையில் ஒன்றிய அரசு அவர்களுடன் 4கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
அதில் 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி, கோதுமை உள்ளிட்ட 5விளை பொருட்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு உறுதியளித்தது. ஆனால் இதை ஏற்கமறுத்த விவசாயிகள் சட்ட அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். மேலும் இந்த மாதம் 14ம் தேதி டெல்லி முற்றுகை போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் உளுந்து, மசூர் பருப்பு, துவரம் பருப்பு ஆகியன பருப்பு வகைகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் விவசாயிகள் தண்ணீரை அதிகம் பயன்படுத்தா வேண்டிய நெல் பயிர் பயிரிடுவதில் இருந்து மாற்று பயிருக்கு மாறினால் இந்த கொள்முதல் நடைபெறும் என்றும், உளுந்தம் பருப்பை பாரத் என்ற பெயரில் மானிய விலையில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் முடிவு செய்துள்ளன.
பருப்பு வகைகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அடுத்த 5ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழலை பாதிக்காத அதிகம் தண்ணீர் பயன்படுத்தாத பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு கூட்டுறவு சங்கங்கள் இதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் விவசாயிகளின் போராட்டம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனை சமாளிக்க இத்தகைய நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.