Sunday, October 6, 2024
Home » பக்‌ஷக்

பக்‌ஷக்

by Porselvi

‘பக்‌ஷக்’ என்றால் தமிழில் ‘ வேட்டை மிருகம்’ எனப் பொருள். பெண்களை வேட்டையாடும் மிருகக் கும்பலை பிடித்துக் கொடுக்க போராடும் ஒரு உள்ளூர் பெண் நிருபரின் தேடல்தான் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் டப்பாகி வெளியாகியிருக்கும் ‘பக்‌ஷக் ‘ இந்தி படத்தின் கதை. ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் புல்கிட் இயக்கத்தில் ஓடிடியில் வெளியாகியிருக்கும் இப்படத்தின் நாயகியாக பூமி பெத்நேக்கர் நடித்திருக்கிறார். 2018ம் ஆண்டு நம் தேசத்தையே உலுக்கிய பீகார் ‘முசாபர்பூர் காப்பக வழக்கை’ மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். சிறு பத்திரிகை நடத்தும் வைஷாலி சிங், மற்றும் அவருடன் கேமராமேனாக வேலை செய்யும் பாஸ்கர் சின்ஹா. இருவரும் கிடைக்கும் செய்திகளைக் கொண்டு ஆன்லைன் சேனல் மற்றும் பத்திரிகை நடத்தி வருகிறார்கள். அதே ஊரில் ஒரு காப்பகத்தில் தொடர்ந்து இளம் பெண்கள், குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாவது குறித்த தகவல் கிடைக்கிறது. மேலும் இந்த வன்கொடுமை பிரச்னைக்கான முழு தகவல்களும் கூட அரசுப் பார்வைக்கும் ஏற்கனவே சென்றுவிட்டது. ஆனால் பின்னணியில் இருக்கும் ரவுடிகள், கொலைகாரர்கள், அரசியல் சக்தி, என அரசு சார் ஊழியர்களும் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். பெண்களின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்ப் பொடி தூவுவது, அல்லது சிகரெட்டால் சுட்டு சாம்பல் கோப்பை போல் பயன்படுத்துவது என பல கொடுமைகளையும் செய்கிறார்கள் காப்பகத்தை நடத்தும் குழு மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் பெரும்புள்ளிகள். 10க்கும் மேலான பெண்கள் காணாமல் போகிறார்கள். சிலர் நடக்கும் கொடுமையைத் தாங்க முடியாமல் இறந்துவிடுகின்றனர் அல்லது கொல்லப்படுகிறார்கள். சுமார் ஆறு மாதங்களாக நடந்துகொண்டிருக்கும் இந்த அநீதி பத்திரிகையாளர் வைஷாலி பார்வைக்கு வருகிறது. தொடர்ந்து உண்மையக் கொண்டு வர வைஷாலியும், அவரது கேமரா மேன் பாஸ்கர் சின்ஹாவும் போராடுகிறார்கள். ஆனால் பணபலம், ஆள் பலம் என பெரிய அந்தஸ்த்துடன் விளங்கும் பன்சி சாஹுவை எதிர்க்க நினைத்தாலே வைஷாலியின் குடும்பம் வரை தாக்குதல் நடக்கிறது. பல கட்ட முயற்சிக்குப் பின் தேடலின் மூலம் அங்கே இருந்து தப்பித்து சமையலுக்காக வந்த இளம் பெண் தைரியமாக வீடியோவில் பேச மொத்த கூட்டமும் சிக்குகிறது.

வைஷாலி சிங்காக ‘டாய்லெட்’ பட புகழ் பூமி பெத்நேக்கர், பாஸ்கர் சின்ஹாவாக சஞ்சய் மிஸ்ரா, பன்சி சாஹுவாக ஆதித்யா வஸ்தவ். படம் முழுக்க பெண்கள் வன்கொடுமை மட்டுமின்றி பத்திரிகையாளராக பெரிய அந்தஸ்தில் இருப்பினும் கூட குடும்பம், குழந்தை, வீட்டை கவனி என்னும் உறவுகள், கணவன் பேச்சுமாக பெண்ணியத்தையும் எளிமையாகச் சொல்லி திரைக்கதை நகர்கிறது. ‘கொஞ்சம் பருப்பு, அரிசி ரெண்டையும் குக்கர்ல தூக்கிப் போட்டா வெந்துடும். அதைக்கூட நீங்க கத்துக்க மாட்டிங்களா?‘ ‘உங்களுக்குப் பசிச்சா நீங்க சமைச்சு சாப்பிடக் கத்துக்கோங்க’, ‘எனக்கு குழந்தை எப்போ பெத்துக்கணும்ன்னு தோணுதோ அப்போதான் பெத்துக்குவேன்’ போன்ற வசனங்கள் மாடர்ன் பெண்களின் ஒட்டுமொத்த குரலாக பூமியின் குரலில் ஒலிக்கிறது. நம் பிறந்த மண்ணில் நம்மைப் போன்று வாழ அத்தனை உரிமைகளும் கொண்ட ஆறறிவு படைத்த பெண்கள் இப்படி எங்கெங்கோ எதோ ஒரு வழியில் தினம் தினம் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும் நம் வீட்டில் இருக்கும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு பிரச்னை வராத வரை நமக்கு ஏன் அக்கறை என்றில்லாமல் ஒவ்வொரும் நினைத்தாலே இப்படியான கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் எனவும் வகுப்பெடுத்திருக்கிறது இந்த ‘வேட்டை மிருகம்’.
– மகளிர் மலர் குழு

You may also like

Leave a Comment

nineteen − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi