சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணி மேற்கொள்ள தமிழ்நாட்டில் உள்ள பிற நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். இந்த பணிக்காக ராஜபாளையம் நகராட்சியின் துப்புரவு அலுவலர் ஜெயப்பால் மூர்த்தி என்பவர் சென்னைக்கு கடந்த டிசம்பர் 5ம் தேதி வரும் போது விக்கிரவாண்டி அருகில் ஏற்பட்ட விபத்தில் காலமானார்.
அவரது மனைவிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கவும் மற்றும் அவரது வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். மேற்படி அறிவிப்பிற்கிணங்க, ராஜபாளையம் நகராட்சியின் துப்புரவு அலுவலர் ஜெயப்பால் மூர்த்தி என்பவரது மகன் கண்ணன் என்பவருக்கு கருணை அடிப்படையில் ராஜபாளையம் நகராட்சியில் பணி ஆய்வாளராக பணி நியமன ஆணை கடந்த 5ம் தேதி அமைச்சரால் வழங்கப்பட்டது. மேலும் அவரது மனைவி மகேஸ்வரிக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகையை மின்னணு பரிவர்த்தனை மூலம் வங்கிக் கணக்குக்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது.