சென்னை: திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (52), நைஜீரியாவில் வேலை செய்து வந்தார். அவருடன் சென்னையை சேர்ந்த கவுதம் சிவசாமி என்பவரும் வேலை பார்த்துள்ளார். இருவரும் நெருங்கிய குடும்ப நண்பராக பழகி வந்துள்ளனர். 2005ம் ஆண்டு, சென்னை வேப்பேரி மத்திய குற்றப் பிரிவில் சுப்ரமணிக்கு எதிராக கவுதம் சிவசாமி புகார் கொடுத்தார். சுப்ரமணி தன்னை சாமியார் என கூறிக்கொண்டு, மறைந்த என் தாயாரிடம் பேசுவதாகவும் பூஜை செய்வதாகவும் கூறி ரூ.2.05 கோடி வரை பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். திருவனந்தபுரத்தில் தலைமறைவாக இருந்த சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர். ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சுப்ரமணி மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, இவரை ஜாமீனில் விட்டால் தலைமறைவாகிவிடுவார் என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, போலி சாமியாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.